Friday, January 20, 2012

பௌத்தமதத் தத்துவம்

                                           பௌத்தமதத் தத்துவம்




 
"பேதமை செய்கை உணர்வே அருவுர
வாயில் ஊறே நுகர்வே வேட்க
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன
இற்றென வகுத்த இயல்பீ ராறும
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர
அறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர்."
(மணிமேகலை 24-ஆம் காதை 105-110, 30-ஆம் காதை 45-50)
 
 
 

    பௌத்தமதத் தத்துவம் பன்னிரண்டு நிதானங்களையுடையது. (நிதானம் = காரணம்). பன்னிரண்டு நிதானங்களைத் தமிழில் பன்னிரு சார்பு என்பர்.
அவையாவன:
1. அவிஜ்ஜை, 2. ஸங்க்காரம், 3. விஞ்ஞானம், 4. நாமரூபம், 5. ஸளாயதனா, 6. பஸ்ஸ, 7. வேதனா, 8. தண்ஹா, 9. உபாதானம், 10. பவம், 11. ஜாதி, 12. ஜராமரணம்.

    பாலிமொழிப் பெயர்களாகிய இவற்றைச் சீத்தலைச் சாத்தனார் தமது மணிமேகலை என்னும் நூலிலே கீழ்க்கண்டவார்று தமிழ்ப் பெயரால் கூறுகிறார்:-
1. பேதமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6. ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்.

    இப்பன்னிரு சார்புகளின் தன்மைகளைச் சாத்தனார் மணிமேகலை 30 ஆம் காதையில் விளக்கியுள்ளார். இச்சார்புகளினாலே பிறப்பு இறப்பு உண்டாகின்றன. சார்புகளை அறுத்தால், பிறப்பு இறப்பு நீங்கி நிர்வாண மோட்சம் எனப்படும் வீடு பேற்றினை அடையலாம். இவற்றைப் பாலி மொழியில் உள்ள பிடக நூல்களில் கூறியுள்ளபடியே சாத்தனார் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார். விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் கீழ்க்கண்டபடி கூறப்பட்டுள்ளது:

"அவிஜ்ஜா பச்சயா ஸங்க்காரா
ஸங்க்கார பச்சயா விஞ்ஞானம்
விஞ்ஞான பச்சயா நாமரூபம
நாமரூப பச்சயா ஸளாயதனம
ஸளாயதன பச்சயா பஸ்ஸ
பஸ்ஸ பச்சயா வேதனா *
வேதனா பச்சயா தண்ஹா
தண்ஹா பச்சயா உபாதானம்
உபாதான பச்சயா பவ
பவ பச்சயா ஜாதி
ஜாதி பச்சயா ஜராமரணம
ஸோக பரிதேவ துக்க தோமஸ்ஸு பாயாஸா ஸம்பவந்தி"
                                * புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.

    இத் திரிபிடக வாக்கியத்தைச் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்து, சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:

"பேதைமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா ஊறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறெனத்
தவலில் துன்பந் தலைவரும் என்ப. "
(மணிமேகலை 30-ஆம் காதை 103-116)
    இவ்வாறு துன்பத்திற்கு (பிறப்பிற்கு)க் காரணமான பன்னிரண்டு சார்புகளையும் கூறியபின்னர், பிறவாமையாகிய இன்பத்திற்குக் காரணத்தை விநயபிடகம், மகாவக்கம், முதற்காண்டம் மேலும் கீழ்வருமாறு கூறுகிறது:

"அவிஜ்ஜா யதுவேவ அஸே
விராக நிரோதா ஸங்க்கார நிரோத
ஸங்க்கார நிரோதா விஞ்ஞான நிரோதோ
விஞ்ஞான நிரோதா நாமரூப நிரோத
நாமரூப நிரோதா ஸளாயதன நிரோத
ஸளாயதன நிரோதா பஸ்ஸ நிரோத
பஸ்ஸ நிரோதா வேதனா நிரோதோ
வேதனா நிரோதா தண்ஹா நிரோதோ
தண்ஹா நிரோதா உபாதான நிரோத
உபாதான நிரோதா பவ நிரோத
பவ நிரோதா ஜாதி நிரோத
ஜாதி நிரோதா ஜராமரணம் ஸோக
பரிதேவ துக்க தோமஸ் ஸு பாயாஸா நிருஜ்ஜந்தி"
    இதனை மொழிபெயர்த்துச் சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:
"பேதைமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறும் மீளும்
* ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும், கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும், தோற்றம் மீளப
பிறப்பு மீளும், பிறப்புப் பிணி மூப்புச
சாக்கா டவலம் அரற்றுக் கவல
கையா றென்றிக் கடையில் துன்பம
எல்லாம் மீளும். " (மணிமேகலை 30-ஆம் காதை 119-133)
* புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.
    இந்தச் சார்புகளை (நிதானங்களை) ஊழின் வட்டம் அல்லது ஊழ் மண்டிலம் என்பர். இவ்வூழ் வட்டம் சந்தி, கண்டம், காலம், குற்றம், வினை, பயன், நோய் காரணம் என்னும் உறுப்புகளையுடையது (படம் காண்க)

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் - 359)
என்றபடி இச் சார்புகளை அறுத்து வீடு பெறுவதே பௌத்தர்களின் நிர்வாண மோட்சமாகும். வீடு பேறடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை (சத்தியங்களை) அறிய வேண்டும்.

நான்கு உண்மைகளாவன:
1. நோய் (துக்கம்)
2. நோய் காரணம் (துக்கோற்பத்தி)
3. நோய் நீங்கும் வாய் (துக்க நிவாரணம்)
4. நோய் நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்)
என்பன. இவற்றை சற்று விளக்குவோம்.

1. நோய்: பிறத்தல் துன்பம். பிணி, மூப்பு, சாக்காடடைவது துன்பம். அரற்று, கவலை, கையாறு இவை எல்லாம் துன்பந் தருவன. சுருங்கக்கூறின், புலன்களால் உண்டாகும் பற்றுகள் எல்லாம் துன்பம் தருவன என்று அறிதல் முதல் உண்மை.
"உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே
அவலம் அரற்றுக் கவலை கையாறு என
நுவலப் படுவன நோய் ஆகும்மே " (மணி 30. 179-182)

2. நோய் காரணம்: துன்பம் விளைவதற்குக் காரணமாக இருப்பவைகளை உணர்வது இரண்டாவது உண்மை.
"அந் நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும வீட்டம் இவை காரணம் ஆகும்" (மணி 30. 183-185)

3. நோய் நீங்கும் வாய்: நோயையும் நோய்க்குக் காரணமாக இருப்பவைகளையும் நன்கறிந்து இவற்றிற்கு ஆசை (அவா) தான் காரணம் என்பதை நன்குணர்ந்து நோயினின்று விடுதலையடையும் வாயிலை அறிவது மூன்றாவது உண்மை.

"துன்பம் தோற்றம், பற்றே காரணம்
இன்பம் வீடே, பற்றிலி காரணம்" (மணி 30. 186-187)

என்னும் உண்மையை உறுதியாக உணர்தல் துக்க நிவாரணம் என்பது.

4. நோய் நீங்கும் வழி: துன்பத்தைப் போக்கி வீடு பேறாகிய நிர்வாண மோட்சத்தையடைவதற்குரிய வழி யாது எனில், அட்டாங்க மார்க்கம் என்னும் எட்டு வித ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதாகும்.
அஷ்டாங்க மார்க்கமாவன:
1. நற்காட்சி (ஸ்மயக் திருஷ்டி)
2. நல்லூற்றம், அஃதாவது நற்கருத்து (ஸம்யக் சங்கல்பம்)
3. நல்வாய்மை (ஸம்யக் வாக்கு)
4. நற்செய்கை (ஸம்யக் கர்மம்)
5. நல்வாழ்க்கை (ஸம்யக் ஆஜிவம்)
6. நல்லூக்கம், அஃதாவது நன்முயற்சி (ஸம்யக் வியாயாமம்)
7. நற்கடைப்பிடி (ஸம்யக் ஸ்மிருதி)
8. நல்லமைதி (ஸம்யக் சமாதி)

இவற்றின் விளக்கத்தை விரிந்த நூலிற் காண்க.
இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும். இவற்றைச் சிறிது விளக்குவோம்.
சீலம்: இது பஞ்ச சீலம், அஷ்டாங்க சீலம், தச சீலம் என மூன்று வகைப்படும்.

பஞ்ச சீலமாவது:
1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல்.
2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.
3. கற்புநெறியில் சிற்றின்பம் துய்த்தல்; அதாவது, முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல்.
5. மயக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை.

இந்தப் பஞ்ச சீலங்கள் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றோடு,
6. இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல்.
7. பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நுகராமை.
8. பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல
என்னும் மூன்றையும் சேர்த்து அஷ்டசீலம் (எட்டு ஒழுக்கம்) என்பர்.அஷ்டசீலம் இல்லறத்தாரில் சற்று உயர்நிலை யடைந்தவர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களாகும்.
இவற்றோடு,
9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்.
10. பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல்
ஆகிய இவை இரண்டும் சேர்த்து தசசீலம் (பத்து ஒழுக்கம்) எனப்படும்.

    தசசீலம் துறவிகள் ஒழுகவேண்டிய ஒழுக்கமாகும். தசசீலத்தில் ஒழுகும் துறவி, சிற்றின்பத்தை அறவே ஒழிக்கவேண்டும். தசசீலங்களை மேற்கொண்டு, அடக்கமான பேச்சையும் அடக்கமான செயலையும் உடையவராய், உலகப் பற்றுக்களை நீக்கித் துறவறத்தை மேற்கொண்டவரே பிக்கு ஆவர். பிறகு, சமாதி (தியானம்) என்பது, துறவறம் மேற்கொண்டு தசசீலங்களில் ஒழுகுகிற துறவியானவர், கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கம். விலக்கவேண்டிய தீய எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒரு நிலையில் நிறுத்துவதே சமாதி அல்லது தியானம் என்பது. இதனால், ஐம்புலன்களினால் உண்டாகும் ஆசைகளும்; பகை, கோபம், மறதி, ஐயம், அடக்கமின்மை முதலிய தீய குணங்களும் தடுக்கப் படுகின்றன; மனம் சாந்த நிலையை அடைகிறது. பிறகு, பஞ்ஞா என்னும் ஞானநிலையில் ஒழுகவேண்டும். தியானமாகிய சமாதி ஒழுக்கத்தினாலே, தீய எண்ணங்களும் மனோவுணர்ச்சிகளும் அழிக்கப்படாமல், செயலற்று அடங்கிக்கிடக்கின்றன. திடீரென எழும்பிவிடவும் கூடும். அவ்வாறு, அவை எழும்பிச் செயற்படாதவாறு, பஞ்ஞா அல்லது ஞானம் என்னும் நுண்ணறிவைக் கொண்டு அவற்றை அழிக்க வேண்டும். இந்த ஞானந்தான், பொருள்களை உள்ளது உள்ளவாறு உணரச்செய்து, மனோவுணர்ச்சிகளை அழியச் செய்கிறது. இந்த ஞான நிலையை யடைந்தவர் உலகத்தின் உண்மையான நிலையைக் காண்கிறார். அதனால

"அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத
தனித்துப் பார்த்துப் பற்றுறுத் திடுதல்"
என்றபடி உலகம் நிலையாமையுள்ளது. துன்பம் உடையது, அநாத்மிகமானது. அசுத்தமானது என்றுணர்ந்து பற்றற்று வீடடைகின்றார்.
பௌத்த மதத் தத்துவம் ஒருவாறு சுருக்கமாகக் கூறப்பட்டது.
இது தேரவாத பௌத்த தத்துவமாகும்.

No comments:

Post a Comment